Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
எல்லாக் குழந்தைகளுக்கும் கதை என்றால் வெல்லம்தான். கதை கேட்டல், கதை சொல்லுதல், கதை படித்தால் எல்லாம் பிடிக்கும். அதுவும் வீர தீர சாகச கதைகள் ரொம்பவும் பிடிக்கும். என் சிறு வயதில் எத்தனையோ சாகச கதைகள் படித்திருக்கிறேன், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து புனைந்தும் இருக்கிறேன். ஒவ்வொன்றிலும் வழக்கமாக ஒரு அரசிளங்குமரன் இருப்பான், பலவிதமான சிக்கல்களை சந்தித்து, தன மதியாலும் வீரத்தாலும் வென்று, அரசிளங்குமரியை இன்னல்களினின்று விடுவிப்பான், தன்னுடைய இழந்த நாட்டை மீட்பான்.
இந்த கதைகளை கேட்கும் போது பலவிதமான கேள்விகள் மனதில் எழும்: அந்த மலையின் உயரம் என்ன? செங்குத்தாய் இருந்ததா? அகழி வட்ட வடிவமா, நீள்வட்ட வடிவமா? மதிள் சுவர் ஏறுவதற்கு தேவையான கயிற்றின் நீளம் என்ன? குதிரை போன வேகம் என்ன? என்றெல்லாம். கதை சொல்லுபவர் இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் தர மாட்டார். "உனக்கு கதை வேணுமா வேணாமா?" என்ற மிரட்டலோடு கேள்விகள் அடங்கி விடும்.
இன்று என்னை மீண்டும் அந்த சிறுவனாக்கியவர் முனைவர் பிரபாகரன். அவருடைய கதைகள் கணிதத்துடன் பின்னிப் பிணைந்து முன்னேறுகின்றன. கோணம் மீட்ட கோமகன் வடிவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுவும் சாகச கதைதான். மலை, அரண்மனை எல்லாம் உண்டு. சிக்கல்களினின்று வெளிவர தேவையானது கோணங்கள் பற்றிய அறிவு. செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், எல்லாம் என்ன என்று அறிந்திருப்பதோடு, ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து இரு கரங்கள் இயங்குகையில் கோணங்கள் எவ்வாறு மாறுகின்றன என்ற புரிதலும் தேவைப்படுகிறது.
கதையில் சந்திக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுடைய பெயர்கள், பேச்சு எல்லாமே மாணவர்களுக்கு சுவையாக இருக்கும். இறுதியில் உள்ள கணித உரையை ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஆசிரியரிடம் ஒரு குற்றச்சாட்டு உண்டென்றால், அது கோணமணி என்ற சுவாரசியமான வில்லனை உருவாக்கி விட்டு அவனை சந்திக்காமல் நம்மை ஏமாற்றி விட்டதுதான்!
கலை வடிவங்களையும் கணிதத்தையும் இணைப்பது மிகவும் தேவையானது. அப்பணியை மிகுந்த அக்கறையுடனும் படைப்பாற்றலுடனும் செய்து வரும் முனைவர் பிரபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முனைவர் பிரபாகரன் இன்னும் பலப்பல கணித கதைகளை உருவாக்கி மாணவர் உள்ளங்களை கணிதத்தின் பால் ஈர்க்க வேண்டும்.
முனைவர் ஆர். ராமானுஜம் பேராசிரியர்
கணித அறிவியல் நிறுவனம்
சென்னை,தமிழ்நாடு